Monday, November 15, 2010

சொல்லாமல் ஒரு ஆசை!


பூஞ்சோலை பூவின்
வாசம் முகர்ந்து
பூவின் மடி தேடி
அலைகின்ற வண்டெனவே
அருகே அமர்ந்திருக்கும்
உன்னிடம் கேளாமல்
தவித்திருக்கும் மனம்

தீண்டுதலோ தொடுதலோ
அல்லாமல்.. இடைவெளி
இன்னும் வேகம் கூட்டும்
அன்பின் வேறு நிலை!
புதிதாய் ஊற்றெடுக்கும்..

சில்லென்று பரவும் காற்றில்
உடல் விடும் வெப்பமோ
மூச்சுக் காற்றில் வெளியேறும்..
வெளியேறா ஆசைகள்
அணுக்களை பிளக்கும்

கண்டு பிடித்துக்கொள்!
கண்டு பிடித்துக்கொள்!
என்றபடி..
என் கண்களில் விரவிகிடக்கிறது
எல்லை மீறுவது உன் விருப்பமென்ற
செய்தியே!


பின்..
பேச்சுக்கள்... தொடர்ந்தும்
முடிவில்..
விடைபெற்று செல்கிறாய்...
கடைசிப்பார்வையில் நீயும்
சொல்லிச்சென்றாய்...
எல்லை மீறுதல் என் விருப்பமென்று...

ஓ....
மடியில் தலை சாய்க்க
தோற்ற எனக்கு
பூவின் இதழில் கிறங்கும் வண்டு
கேலி செய்கிறது.....
சொல்லாமல் ஒரு ஆசை
காலவதியாகிறது...