Thursday, October 22, 2009

உவமைகள் யாவும் உனக்கே சொந்தம்!

அன்பே! எனதுயிரே..

ஆதவன் இரவை அணைத்து
வெளிச்சமாவது போல்..
என்னை நீ அரவணைத்ததாலே
வாழ்வின் வெளிச்சம்!

பூ வரையும் ஓவியன்
இலைகளும் வரைவது போல்..
உன் காதலால்
என்னையும் தாங்குகிறாய்!

இலைகளின் மீதுள்ள
பனித்துளிகள் போல்..
காத்திருப்பேனென ஒடிவந்தாயோ
நெற்றியில் வியர்வை துளிகள்!

கடற்கரை மணலில்
பதிந்த கால் தடங்கள் போல்..
உன் முத்த சுவடுகள்
இதயத்தில் பதிந்து கிடக்கிறது!

திடுக்கிட்டு இரவில்
அழுகின்ற குழந்தைபோல்..
நீ இல்லாத பொழுதுகளில்
கண்கள் அழுகின்றதே

சூழ்ந்துள்ள நீரால்
வளம் பெறும் நிலம் போல்..
எனைச் சூழ்ந்த உனதன்பு
சொல்லவும் வேண்டுமோ எனதுயர்வு!

கடலில் பிறந்த முத்து
மங்கையருக்கு அழகாவது போல்..
என்னில் பிறந்த உவமைகள்
யாவும் உனக்கே சொந்தம்!

தாயின் கதகதப்பில்
இருக்கும் குழந்தை போல்
உன் நினைவின் கதகதப்பில்
வாழ்கிறேன் என்றும்..

அன்பே! எனதுயிரே...